ஆணவ கொலை


'சாதிகள் இல்லையடி பாப்பா' என்றார் நமது தேசியக்கவி. ஆனால் சமீப காலமாக நமது தேசத்தில் நடக்கும் ஆணவ கொலைகளையும் சாதிய வன்கொடுமைகளையும் பார்த்தால் பாப்பாக்களுக்கு மட்டுமே சாதி என்பது இல்லை போலும்.

ஒருவருடைய உயிரை மாய்த்துக் கொள்ள அவருக்கே உரிமை இல்லாத போது, அவர்களின் பெற்றோர்களுக்கோ அவர்களின் சாதியை சேர்த்தவர்களுக்கோ யார் அந்த உரிமையை கொடுத்தது..?



சிறு வயதில், தனது பிள்ளைகள் மீது விளையாட்டிலும் சிறு கீறல் கூட விழுந்துவிட கூடாது என அவ்வளவு கவனமாக அவர்களை பாதுகாக்கும் பெற்றோரே  பின்னாட்களில், தன்னை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உயிரை மாய்க்கத் துணிவது எப்படி சாத்தியமாகிறது..?

இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்தானே தவிர குறிப்பிட்ட, சாதி மக்களுக்கானது மட்டுமல்ல.

தனது உயிருக்கோ , தனது சொந்தங்களின் உயிருக்கோ ஆபத்து என வரும்போது யாரும் சாதியை பார்த்து உதவி கேட்பதும் இல்லை; பெறுவதும் இல்லை; இரத்ததானம் பெறுவோரும் கொடுப்போரும் சாதி பார்ப்பது இல்லை. எந்த சாதிக்காரன் என தெரியாமல் தான், நம் முதலாளிகளிடம் நாம் ஊதியம் பெறுகிறோம்; இது போன்று என்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பின் எதற்கு இந்த சாதி வெறி.?

உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் வாழ்க்கையை தீர்மானம் செய்ய உங்களைவிட அதிக உரிமை உள்ளது. சரியான வயதை எட்டியபிறகு அவர்கள் செய்யும் திருமணம் சட்டப்படியே செல்லும் போது பெற்றோராகிய நீங்கள் சாதியை காரணம் காட்டி பிரிக்க நினைப்பதோ, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பதோ சட்டப்படி குற்றமே.!

உங்களால் அவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலோ அவர்களை மன்னிக்கமுடியாமலோ போனால், தயவு செய்து அவர்களை உங்கள் கோபம் தீரும் நாள் வரை ஒதுக்கி வையுங்கள். அதை விடுத்து அவர்களின் உயிரை எடுத்து, நீங்கள் சிறைக்குச் செல்வதால், உங்களுக்கு பதக்கம் ஒன்றும் உங்கள் சாதி மக்கள் சார்பில் வழங்க போவது இல்லை.

சாதி என்பது இடைப்பட்ட காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப் பட்டதே தவிர ஆதிகாலத்தில் சாதி என்ற ஒன்று கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சரி எது தவறு எது என மனிதர்களால் மட்டும் பகுத்தறிய முடியும் என்பதற்காகவே நமக்கு ஆறாம் அறிவாக பகுத்தறிவை கடவுள் கொடுத்திருக்கிறார். சிறிதேனும் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தித்து செயல்படுங்கள். மனிதராய் இருக்க முயற்சியுங்கள்.
நன்றி..!

No comments:

Post a Comment